சென்னை:தமிழ்நாடு மின்னணு நிறுவனம் எல்காட் சார்பில் ‘தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு’ என்ற கருத்துருவில் மாபெரும் உச்சி மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு மார்ச் 23 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசியதாவது:தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார நிலையை அடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.அதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 பில்லியன் டாலர் பங்களிப்பு இருக்க வேண்டுமென தீர்மானித்துள்ளோம். அதன் ஒருபகுதியாக ‘யூமாஜின் சென்னை’ என்ற தலைப்பில் மாபெரும் உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்பட உள்ளது.இதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயலாற்ற இருக்கிறோம். இதில் பசுமை போக்குவரத்து, டிஜிட்டல் எதிர்காலம், அக்ரி நெக்ஸ்ட், காலநிலை மாற்றம், சுகாதாரம், புதிய தொழில்நுட்பம் ஆகிய 7 பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
மேலும், இந்த மாநாட்டில் ‘புளூ ஓஷன்’ விருதுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விருது தொழில் முனைவோர் தங்களின் புதுமையான சிந்தனைகளை முன்னெடுக்க தொடக்கமாக இருக்கும்.இந்த விருதுக்கான பரிந்துரைகளை umaginechennai.com என்ற இணையதளத்தில் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், புதுமைப் பெண் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 66 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான துணைத்தூதர் லிஸ் டால்போட் பாரே, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் நீரஜ் மித்தல், எல்காட் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.