புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 18-வது சர்வதேச ரயில்வே யூனியன் உலக பாதுகாப்பு மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) பொது இயக்குநர் சஞ்சய் சந்தர் கூறியதாவது:இந்திய ரயில்வேயின் சார்பில் ரயில்வே பாதுகாப்புப் படை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை இந்த மாநாடு 4 நாட்கள் வரை நடைபெறவுள்ளது. ‘ரயில்வே பாதுகாப்பு உத்தி – எதிர்கால நோக்கம் மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.