இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அந்த நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜூங் உடன் மோதினார். அந்த ஆட்டத்தில் 23-21, 20-22, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிப்பெற்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். அதேபோல, ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றில் இந்தியவைச் சேர்ந்த லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேவை 21-18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். இதன்மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் காலிறுதிக்கு முன்னேறிய லக்ஷயா சென் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீன தைபேவை சேர்ந்த சேவ் டின் சென்னிடம் 16-21, 21-12, 14-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றார். ஆட்டத்தின் முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவ் டின் சென், அடுத்த சுற்றில் லக்ஷயா சென் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், 3ஆவது சுற்றில் துடிப்புடன் விளையாடிய சேவ் டின் சென் ஆட்டத்தை கைப்பற்றினார். இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து இன்று விளையாடவுள்ளார்.