புதுடெல்லி : உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படும் 20 ஆயிரம் அடி உயரம் உடைய காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி , இங்கு இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன், கொடுங்குளிருடனும் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில் சியாச்சினில் முதல்முறையாக, கேப்டன் சிவா சவுகான் என்ற இந்திய பெண் ராணுவ அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ராணுவ என்ஜினீயர்கள் பிரிவைச் சார்ந்த சிவா சவுகான், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது 11 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். ராணுவப் பணியில் தீவிர ஆர்வம் கொண்ட இவர், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றவர். சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகான்தான். மேலும் ,அவருக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.