இந்தூர்: இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடி சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள்குவித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.1 ஓவர்களில் 212 ரன்கள் விளாசி மிரளச் செய்தது. தனது 30-வது சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 85 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் போல்டானார். தனது 4-வது சதத்தை 72 பந்துகளில் கடந்த ஷுப்மன் கில் 78 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் விளாசிய நிலையில் பிளேர் டிக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். லாக்கி பெர்குசன் வீசிய 8-வது ஓவரில் ஷுப்மன் கில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்க எடுத்தனர்.
400 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுவரிசை பேட்டிங் சரிவை கடும் சரிவை சந்தித்தது. இஷான் கிஷன் 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டஃபி பந்தில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 14 ரன்னில் நடையை கட்டினார். இறுதிக் கட்டத்தில் மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 9, ஷர்துல் தாக்குர் 25 ரன்களில் வெளியேறினர். கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (3) ரன் அவுட் ஆனார்.
நியூஸிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதில் ஜேக்கப் டஃபி 10 ஓவர்களில் 100 ரன்களை தாரை வார்த்திருந்தார். பிளேர் டிக்னர் 76 ரன்களை விட்டுக்கொடுத்தார். 386 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41.2 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 138 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 42 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். யுவேந்திர சாஹல் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா, உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.