இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அந்த அணியை ‘ஒயிட்வாஷ்’ செய்யும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்தியா வலுவாக உள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.