கொழும்பு : அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. இந்தியா கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) நிதியை வாழ்வாதார நிதி போல அந்த நாட்டுக்கு வழங்கியது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அன்னியச்செலாவணி கையிருப்புக்காக இந்த உதவியை அறிவித்தது. பின்னர் எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,100 கோடி) நிதி உதவியை அறிவித்தது. இந்தக் கடன் பின்னர் 700 மில்லியன் டாலராக (சுமார் ரூ.5,740 கோடி) ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பஸ்களை வழங்கியது. இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், ” இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பஸ்களை வழங்கினார். இந்த வகையில் 500 பஸ்களை இந்தியா வழங்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது எனவும் தெரிவித்துள்ளது.