இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதும் இரண்டாவது டி20 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு நாக்பூரில் நடந்தது. மழை காரணமாக டாஸ் போட்டு ஆட்டத்தை தொடங்குவது தாமதமானதால், 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவரில் 91 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 7.2 விக்கெட்களில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனிலையில் உள்ளனர். முன்னதாக, முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் சமமாக இருப்பதால், 3ஆவது மற்றும் இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெறும் அணியே தொடரை கைப்பற்ற முடியும். எனவே, சமனிலையில் உள்ள இரு அணிகளும் வெற்றியை அடைய தங்களின் பலத்தை காட்டுவார்கள் என எண்ணப்படுகிறது.