75ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த ஓராண்டு காலமாக 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி சுகந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி உரையாற்றவுள்ளார். இதற்காக முதல் நாள் ஒத்திகை கடந்த 6ஆம் தேதியும், இரண்டாம் நாள் ஒத்திகை 11ஆம் தேதியும் நடைபெற்ற நிலையில் இன்று இறுதி நாளான மூன்றாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சர் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான சிறந்த தொண்டு நிருவனம் விருது, சிறந்த சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த கூட்டுறவு பணிக்கான விருது, உள்ளிட்ட விருதுகள் வழங்க உள்ளது. அதேபோல, தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை பாராட்டி கடந்த மாதம் முன்னாள் குடியரசு துணை தலைவர் வழங்கிய குடியரசு தலைவரின் கொடி இந்த முறை சுதந்திர தின விழா பேரணியில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையில், ஒத்திகை நடைபெற்ற நேரத்தில் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.