புதுடெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை காலை கணக்கு ஆய்வுப் பணிகளை தொடங்கினர். இந்த ஆய்வில், பரிமாற்ற விலை விதிகளை பிபிசி மீறி இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இன்றைய சோதனையின்போது, சர்வதேச வரி விதிப்பு முறையைப் பயன்படுத்தி பிபிசி, இந்தியாவில் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதி விவகாரம், அது செயல்படும் விதம் ஆகியவை தொடர்பான டிஜிட்டல் மற்றும் காகித தரவுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக பிபிசி தயாரித்த ஆவணப்படங்கள் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்பட சமூக ஊடகங்களில் வெளியிட, பகிர இயலாதவாறு தடை செய்யப்பட்டன. ஆவணப்படத்தை முடக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.