பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் சோதனை. ‘இந்தியா மோடி மீதான கேள்வி’ என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து சேகரித்ததாகவும் தெரிகிறது.