தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சியான பாஜகவும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா ரூ.1,400 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளையில், டெல்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக சிபிஐ விசாரணைக்கு சக்சேனா சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தார். இதனால், ஆட்சிப் பணியில் அவர் தலையிடுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து, டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் சக்சேனா மீதான குற்றச்சாட்டை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சியில் எம்எல்ஏக்களும், ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏ.க்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.