சென்னை: ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக, அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும் அரசின் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி சட்டன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, அவை முன்னவர் துரைமுருகன் உள்ளிடோர் பேசினர். இதனைத் தொடர்ந்து, அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.