தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியிருப்பதாவது: அரசுப் பணியில் 1992-ம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன், அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.
மேலும், நீரஜ் மிட்டல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார். மங்கத்ராம் சர்மா, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார். பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார். குமார் ஜெயந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார். கே.கோபால், போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் டான்ஜெட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவருமான ராஜேஷ் லக்கானி, கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு பெறுகிறார். அதுபோல, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமாருக்கும் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது.