சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், இடைநிற்றல் மாணவ-மாணவிகளை கண்டறியும் பணிகளை இப்போதே தொடங்கி இருக்கிறது. அதன்படி, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை வருகிற 2-வது வாரத்தில் இருந்து மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஈடுபடுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் எந்தவொரு குடியிருப்பையும் விட்டுவிடாமல் வீடுவாரியாக சென்று கணக்கெடுக்கவும், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச்சரியாக பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த கணக்கெடுப்பின்போது, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளின் விவரங்களையும் சேகரிக்க கூறப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் முறையாக ஆவணப்படுத்தி வைப்பதோடு, பள்ளி செல்லாதவர்களை அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், மேலும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிகள் பாதிக்காதவாறு கள ஆய்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.