மாண்டஸ் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்
சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல்: மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.