ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று இந்த யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையை தொடங்கிவைத்தார். இந்நிலையில் ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தானில் யாத்திரையில் உள்ளார். யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. இன்றைய யாத்திரையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்வீந்த சிங் சுக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பங்கேற்றுள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கிய மூன்று மாதங்களில் ராகுல் காந்தி தமிழகம் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். நடந்து முடிந்த இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இமாச்சலப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.