நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. சில சிறிய வகை பாலங்களுடன், சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில், நீலகிரியில் கனமழை தொடர்பான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை), செந்தில்பாலாஜி (மின்சாரத்துறை), கா.ராமச்சந்திரன் (வனத்துறை) ஆகிய 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். லட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை செய்யப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.