குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில அரசுடன் பேரிடர் மேலாண்மை, கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்புப் படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பாலத்தின் மீது சென்றதால் விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 143 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை புதுப்பிக்கும் பணி அண்மையில் முடிந்து பின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், மோர்பி பாலத்தை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒரேவா குழும நிறுவனம், பாலத்தை ஒட்டுமொத்தமாக சீரமைக்க ரூ.2 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், வெறுமனே ரூ.12 லட்சம் அதாவது திட்ட மதிப்பீட்டுத் தொகையில், 6 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளனர். இதன்மூலம், பாலத்தை மேம்போக்காக மட்டுமே சரிசெய்து பராபரிப்பு பணி முடிந்ததாக கணக்குக்காட்டி உள்ளது விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.