புதுடெல்லி : இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் வருமானத்தை தாக்கல் செய்து வரிகளை செலுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மார்ச் 2023-ல் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,60,122 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 29,546 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 37,314 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 82,907 கோடி. இதில், ரூ. 42,503 கோடி பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்பட்டது. வரி மீதான இரட்டை வரி விகிதத்தின் மூலம் ரூ. 10,355 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில், மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 22 சதவீதம் அதிகரித்து ரூ. 18.10 லட்சம் கோடியாக உள்ளது. முழு ஆண்டுக்கான சராசரி மாத வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 13 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மாதம் சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் 14 சதவீதம் அதிகமாகவும் இருந்துள்ளது. 2023, மார்ச் மாதத்தில் வரி வருவாய் ரிட்டர்ன் தாக்கல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.