சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நடப்பாண்டில் அறிவிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணையும் இடம் பெற்றுள்ளது. இதில் குரூப்-2, 2ஏ காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, அதற்கான முதல்நிலை தேர்வு முடிந்த நிலையில், முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சமீபத்தில் வெளியிடப்பட்ட கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நடைபெறும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 இடங்களுக்கும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வரும் சாலை ஆய்வாளர் பணியில் காலியாக இருக்கும் 762 பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு மே மாதம் நடக்கும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்.
ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகள் பிரிவில் வரும் 101 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படக்கூடிய குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு அதற்கு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, அதே ஆண்டில் மே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்படும். இதற்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். அதேபோல், சுற்றுலா உதவி அதிகாரி, ஆராய்ச்சி உதவி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆணையர், புள்ளியியல் உதவி இயக்குனர், உடற்கல்வி இயக்குனர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குரூப்-2, 2ஏ, குரூப்-1 பதவிகளுக்கான புதிய அறிவிப்புகள் குறித்த தகவல்கள் இந்த அட்டவணையில் இடம்பெறாதது, தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.