கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் 33 ஆயிரத்து 377 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 17 ஆயிரத்து 473 கடைகள் அரசு கட்டடங்களில் இயங்குகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் 6 ஆயிரத்து 907 கடைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 300 கடைகள் வீதம், 862 கடைகளுக்கு அரசு புறம்போக்கு நிலங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 243 கடைகளுக்கு நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கடைகளுக்கு ரூ.9.55 கோடி செலவில் மேஜை, நாற்காலி, மின்விளக்கு, மின்விசிறி மற்றும் மின்னணு எடைத்தராசு ஆகியவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடா்பான சான்றிதழும், சேமிப்பு மற்றும் விநியோகச் சங்கிலிக்கான தரச்சான்றிதழும் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளின் நிதித் திறனை மேம்படுத்த 892 நியாய விலைக் கடைகளில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் இயங்கி வருகின்றன. மக்களுக்கு கலப்படமற்ற தரமான நுகா்வோா் பொருள்களை வழங்கும் விதமாக ஊட்டி தேயிலை, அரசு உப்பு, பனை வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தோ்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் சோதனை அடிப்படையில் 5 மற்றும் 2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டா்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலைக் கடைகளை மாதிரி நியாய விலைக் கடைகளாக மாற்றுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில நியாய விலைக் கடைகளில் ஜிபே, பேடிஎம் போன்ற கைப்பேசி செயலி வழி வசதிகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். பின்னா் மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எவா்சில்வா் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.