சென்னை: தொடக்கக் கல்விஇயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் :- தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகளின்படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகளை கண்டறிந்து அது சார்ந்தகருத்துகளை புவியியல் வரைப்படத்துடன் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய ஆரம்பப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிசார்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை வரைப்படத்துடன் துரிதமாக அனுப்பிவும் மேலும், அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்களையும் அதனுடன் இணைக்க வேண்டும் எனவும், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உறுதிசெய்து அறிக்கையாக சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.