தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. புதர்மண்டி கிடந்த வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நடைபாதை, சுற்றுச்சுவர், படகுசவாரி, வாகன நிறுத்த வசதி, உணவகம், இசை நீரூற்று, நீர் விளையாட்டு வசதி உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்ச வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தொங்கு கண்ணாடி பாலம் 250 மீட்டர் நீளம்,1 மீட்டர் அகலத்தில் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரேநேரத்தில் இந்த கண்ணாடி பாலத்தில் 100 பேர் நடந்து செல்லலாம். இந்த கண்ணாடி மேம்பாலத்தில் பொதுமக்கள் எளிதில் ஏறி செல்ல படிக்கட்டுகள், ‘லிப்ட்” வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சிங்கப்பூர் தொழில் நுட்ப வடிவத்தில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாலத்தின் மீது நடந்து செல்லும் போது தண்ணீர் மீது நடந்து செல்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். தற்போது இந்த கண்ணாடி தொங்கு பாலத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காக இந்த பாலத்தை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.