திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து நேற்று சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓர் இடத்திலும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திருப்பதியில் மட்டும் 8 இடங்களில் 92 விநியோக கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 1-ம் தேதி மதியம் 2 மணியில் இருந்து சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து 4.50 லட்சம் டோக்கன்கள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும்.
ஜனவரி 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நேரில்வரும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். ஜனவரி மாதம்2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரத ஊர்வலம் 4 மாட வீதிகளிலும் நடைபெறும், மறுநாள் 3-ம் தேதிதுவாதசியை முன்னிட்டு, காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 2 மலைப்பாதைகளும் திறந்தே இருக்கும். கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளார்.