சென்னை: விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு மே 5-ம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, அன்று முதல் விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வரும் காலங்களில் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இலவசமாகப் பயணிக்கும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் விவரத்தை அனைத்து நடத்துநர்களும் போக்குவரத்து அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். பயணிகளின் விவரத்தை தலைமையகத்துக்குத் தெரிவிக்கும்போது, குழந்தைகள் பயணம் தொடர்பான விவரத்தையும் கிளை மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.