கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி, பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,ஹிமா கோலி ஆகியோர் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்சினையாகும்.இதைத் தடுக்க, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதமாற்றம் செய்வதை தடுக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை, தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
மத்திய அரசு கூறியிருப்பதாவது : மதச் சுதந்திரம் என்ற பெயரில் வேறு மதத்தினரை வற்புறுத்தல் செய்வதோ அல்லது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவதும் அடிப்படை உரிமையில்அடங்காது.கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.