புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது:- குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரானவர்களும் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும். டிரோன்கள் இதை கருத்தில் கொண்டு, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டார்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 15-ந் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும். தடையை மீறி, யாராவது இந்த பொருட்களை பறக்கவிட்டால், இந்திய தண்டனை சட்டத்தின் 188-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.