சென்னை : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்ச்செல்வி உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவு என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த மாதம் 8-ந்தேதி மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:- எவரெஸ்ட் சிகரம் ஏற முடிவு செய்ததும் ஏசியன் டிரெக்கிங் எனும் தனியார் நிறுவனத்தை அணுகினேன். அப்போது அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதென்றால் மலையேறும் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 5 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி இருக்க வேண்டும் என தெரிவித்தனர். நான் மலையேறும் படிப்பை முடிக்காததால் காஷ்மீர் லடாக்கில் உள்ள 6 ஆயிரத்து 496 மீட்டர் உயர மலையில் ஏறுவதாக தெரிவித்தேன். அதன்படி, அந்த மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதிபெற்றேன். எவரெஸ்ட் சிகரம் ஏற தகுதிபெற்ற அதேவேளையில் இந்த சாதனையை நிறைவேற்ற பொருளாதார நெருக்கடி முட்டுக்கட்டையாக இருந்தது. எவரெஸ்ட் மலையேற ரூ.45 லட்சம் வரை தேவைப்படும் என தெரிவித்தது.
இதன்காரணமாக அடுத்தகட்டமாக தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கினேன். முதற்கட்டமாக எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் ரூ.20 லட்சம் நிதி திரட்டினேன். தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதேவேளையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்க உதயநிதி ஸ்டாலின் உதவினார்.எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து மீண்டும் மலையில் இருந்து இறங்குவது என இந்த பயணம் முடிவடைய 2 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையோடு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.