தோகா: இன்று நள்ளிவு 12.30 மணிக்கு தோகாவின் அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணியை எதிர்கொண்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி மீதும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மீதும் சமமான எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆட்டத்தின் 5வது நிமிடமே பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆரம்பமே பிரான்ஸ் தனது தாக்குதலை தொடங்க, மொராக்கோவால் இதை சமாளிக்க முடியவில்லை.டிபன்ஸ் பலமிக்க மொராக்கோ, பிரான்ஸின் அதிரடி தாக்குதல் பாணியில் இருந்து மீள பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. மாறாக, ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி கோல் அடிக்க அந்த அணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இறுதியில் மொராக்கோ தோல்வியை தழுவ, நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இதனிடையே, இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது பிரான்ஸ். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெல்லும்பட்சத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பை வென்ற அணி வரிசையில் இணைந்து சாதனை படைக்கும்.