சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது: வானிலை முன்அறிவிப்பு நுட்பங்களை மேம்படுத்தவும் ரேடார் தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரத்தால் குறுகிய நேரத்தில் முன் அறிவிப்பு கணிப்புகளை இப்போது உள்ளதை விட மேம்படுத்த முடியும். வானிலை முன் அறிவிப்பு முன்பு வட தமிழகம், தென் தமிழகம், மாவட்ட அளவில் கணித்து கூறப்பட்டு வந்தது.
ரேடார் புள்ளி விவர தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரங்களில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பதை துல்லியமாக முன் அறிவிப்பு செய்ய முடியும். மற்ற மாவட்டங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்துகிறோம். தற்போது சென்னையில் 2 ரேடாரும், காரைக்காலில் ஒரு ரேடாரும் உள்ளன. தமிழக அரசு சார்பில் சேலம், ராமநாதபுரத்தில் 2 ரேடார்களை அமைக்க உள்ளது. இனி வரும் காலங்களில் எந்த பகுதியில் மேகம், இடி, மின்னல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அது எந்த பக்கம் நகர்ந்து சென்று மழையை தரும் என்பதை துல்லியமாக கூறக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.