ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிற 3-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் நாளை (புதன்கிழமை), அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் 3-ந் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.