சென்னை:- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட்டில், 122 ஓட்டுனர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குனர் அவர்களால், ஓட்டுனர் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் அப்போக்குவரத்துக்கழக வட்டார எல்லைக்குட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும். மேலும், ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். பின்னர், மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நபர்களை, சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.