சென்னை: தமிழக சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்.11) நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், “தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” என்று கூறிய நிலையில், இந்தக் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.