சென்னை: ஜி-20 அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கல்வித்துறை சார்ந்த ஜி20 முதல் கல்வி பணிக்குழு மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உயர்கல்வித் துறை செயலர் கே.சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை செயலர் சஞ்சய் குமார் மற்றும் 30 உறுப்பு, விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 80 பேர் கலந்துகொண்டனர்.
மத்திய உயர்கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி கூறியதாவது: தற்போதைய காலச்சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 கல்விப் பணிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை குறைக்கவும், தொழிற்கல்வியை மேம்படுத்தவும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதன்படி, தேசிய கல்விக் கொள்கையின் மூலம் 50 சதவீத பள்ளிக் குழந்தைகள் வரும்காலத்தில் திறன் பெற்றவர்களாக இருப்பர். மேலும், மாணவர்களின் திறன்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு ஒரு செயல் திட்டமும் வகுக்கப்படும்.
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மார்ச் 15-ம் தேதி அமிர்தசரஸில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் முன்வைக்கப்படும். ஜி20 மாநாடு சார்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் கூட்டங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.