இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த விவரங்களின் படி, 12 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா நோய் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 13 ஆயிரத்து 216 பேருக்கும், நேற்று 12 ஆயிரத்தி 899 பேருக்கும் என குறைந்து வந்த கொரோனா நோய் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மேலும் குறைந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 33 லட்சத்து 09 ஆயிரத்து 473ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 76 ஆயிரத்து 700 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 537 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 07 ஆயிரத்து 900ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 18 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 1,96,18,66,707 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.