புதுடெல்லி : பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக நேற்று இணையவழி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- மத்திய அரசின் ‘முத்ரா’ திட்ட கடன்களை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். பெண்கள் மீதான மரியாதையின் அளவை அதிகரிப்பதன் மூலமும், சமத்துவ உணர்வை அளிப்பதன் மூலமும்தான் இந்தியா முன்னேறிச் செல்ல முடியும். கடந்த 9 ஆண்டுகளில், பெண்கள் மேம்பாடு என்பது பெண்கள் தலைமையிலான மேம்பாடாக வளர்ந்துள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட 3 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீர்மானிக்கும் திறன், மனஉறுதி, சிந்தனைத்திறன், இலக்கை எட்ட பாடுபடும் திறன் போன்றவை பெண்சக்தியின் வலிமைகள். இவை இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இன்று பெண்களுக்கு அதிகாரம் அளித்ததால், சமூக வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளி மற்றும் அதற்கு மேல் படிக்கும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவம், விளையாட்டு, வர்த்தகம், அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் பங்கு அதிகரித்ததுடன், அவர்கள் முன்னால் நின்று பணியாற்றுகிறார்கள்.
‘ஸ்வாநிதி’ திட்டத்தில், பெண்களுக்கு பிணை இன்றி கடன் வழங்கப்படுகிறது. மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்களுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில், மகளிர் சுய உதவிக்குழுக்களில் 7 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன்களை பெற்றுள்ளனர். அவர்கள் சிறு தொழில்முனைவோராக உருமாறி உள்ளனர். பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் முட்டுக்கட்டைகளை அகற்ற நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.