காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில், மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கடந்த 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இரண்டாம் சுற்று விசாரணைக்கு இன்று மீண்டும் (ஜூலை 26ஆம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. முன்னதாக, 22ஆம் தேதி காலை அமலாக்கத் துறை முன்பு ஆஜரான சோனியா காந்தியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆஜராவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இதே வழக்கில் ராகுல் காந்தியிடம் ஐந்து நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.