22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது இந்தியா. பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் நாடு திரும்பினர். அவர்களுக்கு, விமான நிலையத்தில் திரண்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்ததுடன், உற்சாக வரவேற்பும் அளித்தனர். எனக்கு அனைத்து ஆதரவையும் அன்பையும் அளித்த இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு சிறந்த உணர்வு மற்றும் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இது எனது முதல் பெரிய பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் தெரிவித்தார். மேலும், மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பூஜா கெலாட் கூறும்போது, ‘நாட்டுக்காக பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை’ என்றார்.