அருணாச்சல பிரதேசத்தில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ந் தேதி சீன ராணுவத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்தி நிறுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீன ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே பூடான் எல்லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே 2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினரிடையே வெடித்த மோதல் 73 நாள் வரை நீடித்தது. அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது தகவல் வெளியானது.
அதாவது டோக்லாமின் கிழக்கு திசையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி அந்த கிராமத்திற்கு பாங்டா என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் தகவல் வெளியானதோடு, இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தற்போது டோக்லாம் பகுதியில் சீனா ஒரு பாலம் உள்பட புதிய கட்டுமான பணிகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. டோக்லாமிற்கு தெற்கு பகுதியில் லாங் மார்போ எனப்படும் பகுதியில் புதிய கிராமங்கள் காணப்படுகின்றன. பூடான் எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்டு வரும் இந்த கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சைபுரு, கைடாங்ஷா மற்றும் குலே ஆகிய பகுதிகளிலும் 2 மாதங்களுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் இந்த கட்டுமான பணிகளை இந்தியா கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.