முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார். மதியம் 12 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூருக்கு செல்லும் முதல்-அமைச்சர், அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.