சென்னை: சென்னை மாநகராட்சியின் 2023 – 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண்டலம் வாரியாக தேவையின்படி பகிர்ந்து அளிக்கப்படும்.
கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்புப் பணிகளைச் செய்யும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரமான Vector Control Kit கொள்முதல் செய்து வழங்கப்படும். சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள், ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள், ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும்.
மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் (Communicable Disease Hospital) சென்னை மாநகரின் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும். 2023-2024ம் ஆண்டில் இந்த ஆண்டு, 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர அங்கீகாரச் சான்றிதழ்கள், National Quality Assurance Standards (NQAS) என்ற நிறுவனத்திடமிருந்து பெற்று தரப்படும்.
2023-2024-ஆம் நிதியாண்டில், ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில், ரூ.1 கோடி மதிப்பில் இரண்டு டயாலிசிஸ் மையங்கள் முதற்கட்டமாக 10 இயந்திரங்களுடன் நிறுவப்படும்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.