வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, வங்கக்கடலில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிககனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பருவ மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக ஒடிசாவின் சில பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை இருக்கும் என்றும் வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றின் தீவிரம் 45 – 55 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது புயலாக மாறுமா என்பது பின்னரே தெரிய வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.