புதுடெல்லி: சமூக ஊடகங்களின் பயன்பாடு சமீப காலங்களாக மக்களிடையே அதிகரித்து உள்ளது. அவற்றில் தங்களது படைப்புகள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவோர் எண்ணிக்கையும் அதிரித்து வருகிறது. பல்வேறு தளங்களில் விரிவடைந்து வரும் இந்த சமூக ஊடக பயன்பாட்டு சந்தையானது, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி என்ற அளவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் பேசும்போது:- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் வரம்புக்கு உட்பட்டு விதிகள் வெளியிடப்படுகின்றன. இந்த விதிகள், முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறாக வழிநடத்த கூடிய விளம்பரங்கள் ஆகியவற்றில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் கட்டமைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். இவற்றை மீறுவோர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் தண்டனை கிடைக்க பெறும். இதனால், தயாரிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அவற்றை ஊக்குவிப்போருக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து குற்றங்கள் நீடிக்கும் என்றால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படடும்.
இதனையடுத்து, சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள், பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது, சலுகைகள் மற்றும் பெற்ற விருதுகள் ஆகிய விவரங்களை வெளியிட வேண்டும். பரிசுகள், ஓட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் நலன் சார்ந்த அனைத்து விவரங்களையும் அவர்கள் வெளியிடுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரங்கள் எளிதில் புரிய கூடிய மற்றும் தெளிவான மொழியில் இடம்பெற வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் மற்றும் அவற்றை கவனிக்காமல் தவற விட்டு விடாதபடிக்கு, விளம்பரங்களுடன் இணைந்து வெளியிட செய்யப்பட வேண்டும். அது லைவ் நிகழ்ச்சியாக இருந்துபோதும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த விளம்பரங்கள், செய்திகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.