சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவில், சென்னை நந்தம்பாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009-ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் கிராம மக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட அந்த நிலம் ராணுவத்துக்கு வழங்கப்படாத நிலையில், ராணுவ மருத்துவமனை சாலையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த நிலத்தை மீட்க கோரி அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, இந்த சாலையை மீட்டுத்தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு தமிழக அரசும், ராணுவ அதிகாரிகளும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.