புதுடெல்லி : இந்தியாவில் உள்ள பி.பி.சி. நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து வர கூடிய பணபரிமாற்றங்களில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. கடந்த ஜனவரியில், 2002-வது ஆண்டில் குஜராத் இனக்கலவரங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக காட்டும் 2 ஆவணப்படங்களை லண்டன் பி.பி.சி நிறுவனம் எடுத்து வெளியிட்டது. இதனை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் முறைகேடுகளை கண்டறிந்துள்ளதாக வருமான வரி துறை கூறியது. அதன்படி பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் பி.பி.சி. வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளில் லாப விவரத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிவி, டிஜிட்டல், ரேடியோ என பி.பி.சி. செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.