சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடா்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த 17ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதனால், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், வழங்கப்பட்ட பதவிகளும், பதவி நீக்கல்களும் செல்லாத நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய இருநபர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் நேரடியாக மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் வழக்கில் வாதங்களை முன் வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.