ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அந்த நாட்டில் பலர் வேலைவாய்ப்பின்றியும், வேலையை இழந்தும் வறுமையில் வாடுகின்றனர். ஊடகத்துறையைப் பொருத்தவரை சுமார் 230க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில், மூசா முகமது என்ற ஊடகவியலாளர் ஆப்கானின் பிரபலமான செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், தற்போது வேலை இழந்துள்ள அவர் பொருளாதார தேவைக்காக சாலையில் சமோசா விற்பனை செய்வதாக புகைப்படம் ஒன்று வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பரவத்தொடங்கியது. இந்த புகைப்படத்தை கபீர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பன்முகத்திறமை கொண்ட மூசா முகமதியில் தற்போதைய நிலை குறித்து எடுத்து கூறிய பிறகு, ஆப்கான் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஜெனரல் அகமதுல்லா வாஷிக், மூசாவுக்கு பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.