சென்னை : சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ , ‘டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக போக்குவரத்து போலீசுக்கு தற்போது பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக ‘வாட்ஸ் அப்’பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். போக்குவரத்து இடையூறுகள், விதிமீறல்கள், போக்குவரத்து போலீசார் செய்யும் தவறுகள் குறித்து புகார்கள் வருகிறது. இதுபோல் வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசின் ‘டுவிட்டர்’ பக்கத்தை 69 ஆயிரத்து 162 பேர் பின்தொடர்கிறார்கள்.
கடந்த 2 மாதங்களில் 10,400 தகவல்கள் பெறப்பட்டது, இதில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வந்த 1267 புகார்களில் 90.5 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முன்பதிவுகள் இப்போது ஆரம்பம்! இதுபோல ‘வாட்ஸ் அப்’ வாயிலாக இந்த ஆண்டு 669 புகார்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. ‘பேஸ்புக்’கை 1 லட்சத்து, ஆயிரத்து 734 பேர் பின் தொடர்கிறார்கள். ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தை 5,256 பேர்கள் பின்தொடர்கின்றனர். சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் தவறான புகார்கள் கூட அனுப்பி விடுகிறார்கள். அதிக அபராத தொகை விதிப்பதால் கோபங்கொண்டு சமீபத்தில் 3 பேர் போக்குவரத்து போலீஸ் மீது புகார் அனுப்பி விட்டனர்.
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் தவறு செய்தால், அந்த தவறை பொதுமக்களும் செய்கிறார்கள். அரசு வாகன டிரைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அண்ணாநகர் மாநகர பஸ் பணிமனையில் பணியாற்றுபவர்கள் மீது அதிக அளவில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது. அது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டி போலீசில் மாட்டுபவர்கள் உரிய அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குறிப்பிட்ட வாகனங்கள் அல்லது அவர்களின் இதர வாகனங்கள் போன்ற அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.