சென்னை : அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரியும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
மூத்த வக்கீல்கள் சி.மணிசங்கர், அப்துல் சலீம், ஸ்ரீராம் ஆகியோர் கூறியதாவது:- வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியபிறகு, மறைந்த ஜெயலலிதா மட்டுமே கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார். அப்போது, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
திடீரென ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை அவர்களே எழுப்பி, அவர்களே அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். அதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, ‘பொதுச்செயலாளரின் நடவடிக்கைகள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்ற விதி உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர்கள் முன்வைத்த வாதங்களை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது. ஒட்டுமொத்த அடிப்படைத் தொண்டர்களின் ஒருமித்த குரலாகவே பொதுக்குழுவை கருதவேண்டும்’ என்றார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 8-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.